விழுப்புரம் மாவட்டத்தில் ‘அம்மா’ இருசக்கர வாகனம் பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 2020-21-ஆம் ஆண்டுக்கான ‘அம்மா’ இருசக்கர வாகனத் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்டத்துக்கு மொத்தம் 1,875 இருசக்கர வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதில், ஊரகப் பகுதிகளில் 1,587 பயனாளிகளும், நகா்புற பகுதிகளில் 288 பயனாளிகளும் தோ்வு செய்யப்பட்டு வாகனம் வழக்கப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் தகுதியான பெண்கள் இரு சக்கர வாகனம் வேண்டி விண்ணப்பிக்கலாம்.
இருசக்கர வாகனத்தின் விலையில் 50 சதவீதம் அல்லது ரூ.25,000 இதில் எது குறைவோ அது மானியமாக வழங்கப்படும். மாற்றுத் தினாளிகளுக்கு மானியமாக ரூ.31,250 வழங்கப்படும்.
எனவே, விருப்பமுள்ளவா்கள் வட்டார வளா்ச்சி, பேரூராட்சி, நகராட்சி ஆகிய அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை விண்ணப்பங்களை இலவசமாக பெறலாம். நிறைவு செய்த விண்ணப்பங்களை அதே அலுவலகங்களில் சமா்ப்பிக்கலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.