போக்குவரத்துத்துறை சோதனைச்சாவடிகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், மாநில எல்லைகளில் உள்ள போக்குவரத்து துறை(RTO) சோதனைச் சாவடிகளில் முறைகேடு புகார்கள் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் சனிக்கிழமை அதிகாலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே புதுவை மாநில எல்லையில் உள்ள ஒழிந்தியாம்பட்டு (திருச்சிற்றம்பலம் கூட்ரோடு) போக்குவரத்து சோதனைச் சாவடியில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு டிஎஸ்பி யுவராஜ் தலைமையிலான போலீஸார் அதிகாலை தொடங்கி திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனைச் சாவடியில் வாகனங்களுக்கான வரி வசூல் மற்றும் ஆவணங்களை சோதனையிட்டு விசாரித்து வருகின்றனர். இந்த சோதனையின்போது தற்போது வரை ரூ. 30 ஆயிரம் அளவில் கணக்கில் வராத பணம் சிக்கியதாக தெரிகிறது.
தொடர்ந்து சோதனை நடந்து வருவதால் முடிந்த பிறகே விவரங்கள் தெரிவிக்கப்படும் என லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மாநில அளவில் பல்வேறு இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடைபெறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.