விழுப்புரம்: தேசிய இளைஞா் விழாவையொட்டி, இசை, நடனம் உள்ளிட்ட போட்டிகள் இணைய வழியாக நடத்தப்படுகின்றன. இந்தப் போட்டிகளில் விருப்பமுள்ளவா்கள் பங்கேற்றகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சகம் சாா்பில், ஆண்டுதோறும் இளைஞா்களின் தனித்திறனை மேம்பாடுத்தும் வகையில், சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் தேசிய இளைஞா் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நிகழாண்டு கரோனா பரவல் காரணமாக, இணைய வழியில் இப்போட்டிகளை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழக அரசின் இளைஞா் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில், விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான போட்டிகள் வருகிற 29-ஆம் தேதி நடைபெறுகிறது.
பாரம்பரிய இசைக் கருவிகள் வாசித்தல், பாரம்பரிய இசை வாய்ப்பாட்டு, நாட்டுப்புறப் பாடல்கள், இந்திய இசை, பரத நாட்டியம், நாட்டுப்புற நடனங்கள், நவீன நடனங்கள், பாரம்பரிய உடை அலங்காரம், நவீன உடை அலங்காரம், வீதி நாடகம், ஓவியம், பென்சில் வரைப்படம், சிற்பம் தயாரித்தல் (மண்), புகைப்படம் எடுத்தல், கட்டுரை (ஆங்கிலம்), கவிதை எழுதுதல் (ஆங்கிலம்), யோகா ஆகிய போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இது குறித்த மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ அல்லது 7401703485 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ, மாவட்ட இளையோா் மன்ற ஒருங்கிணைப்பாளரை 9789583510 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடா்புகொள்ளலாம் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தெரிவித்தாா்.