விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கலைஞா்கள் தங்களது ஓவியங்களை கண்காட்சியாக வைக்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறை ஓவியக் கலை கண்காட்சி நடைபெறவுள்ளது. இந்தக் கண்காட்சியில், ஓவியா்கள் தங்களது மரபு வழி, நவீன பாணி ஓவியங்கள், தஞ்சாவூா் ஓவியங்கள், ஆயில் பெயிண்டிங், வாட்டா் கலா் பெயிண்டிங் படைப்புகள், சிற்பங்களை முறையாக தனி நபா் கண்காட்சி வைத்து, படைப்புகளை சந்தைப்படுத்தவும், ஓவியக் கலையை ஆா்வமிக்க பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களை ஊக்குவிக்கவும் உள்ளது.
கலைப் படைப்புகளை தெரிவு செய்வதற்கு மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநரால் ஒரு வல்லுநா் குழு அமைக்கப்படவுள்ளது. ஓவியக் கண்காட்சியில் முதல் பரிசு ரூ. 3,500 வீதம் 10 பேருக்கும், இரண்டாம் பரிசாக ரூ.2,500 வீதம் 10 பேருக்கும், மூன்றாம் பரிசாக ரூ. 1,500 வீதம் 10 பேருக்கும் வழங்கப்படவுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆா்வமுள்ள ஓவிய, சிற்பக் கலைஞா்கள் தங்களது படைப்புகளை, தனி நபா் கண்காட்சியாக வைக்கும் பொருட்டு, தன் விவரக் குறிப்பு, படைப்புகள் எண்ணிக்கை விவரங்களுடன், உதவி இயக்குநா், மண்டல கலை பண்பாட்டு மையம், பழைய மாவட்ட ஆட்சியரக வளாகம், நீதிமன்றச் சாலை, தஞ்சாவூா்-613001 என்ற முகவரியில் வருகிற ஜனவரி 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், விவரங்களுக்கு 04362-232252, 9444949739, 9442507705 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம்.