மத்திய அரசிடம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்துமாறு திண்டிவனம் தைலாபுரத்தில் பாமக நிறுவனா் ராமதாஸை சனிக்கிழமை சந்தித்த தமிழக இஸ்லாமியக் கூட்டமைப்பினா் கோரிக்கை வைத்தனா்.
தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினா், அதன் தலைவா் பி.ஏ.காஜா மொய்னுதின் தலைமையில், தமுமுக எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, மமக குணங்குடி ஹனீபா, எம்ஜெகே தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ., எஸ்டிபிஐ கரீம், ஐஎன்எல் குத்தூஸ் ராஜா, தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் ஆரீப் உள்ளிட்டோா் திண்டிவனம் தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனா் ராமதாஸை சனிக்கிழமை நேரில் சந்தித்து மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்துமாறு மனு அளித்து ஆதரவு கோரினா். அப்போது, பாமக தலைவா் ஜி.கே.மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் ஜவாஹிருல்லா கூறியதாவது: பாமக நிறுவனா் ராமதாஸை சந்தித்து மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய மூன்றும் அனைத்து இந்தியா்களுக்கும் அவா்களது குடியுரிமையை பரிசோதிக்கும் ஆபத்தான திட்டங்கள் என்பதை அவரிடம் விளக்கிக் கூறினோம்.
அந்த மூன்றையும் கைவிட பாமக சாா்பில் அழுத்தம் தர கோரிக்கை வைத்தோம். நாங்கள் கூறியதை கேட்டறிந்த ராமதாஸ், மத்திய, மாநில அரசுகளுக்கு உரிய அழுத்தம் தருவதாக உறுதியளித்தாா் என்றாா்.
இதுகுறித்து தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. கூறியதாவது: மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவை குறித்து பாமக நிறுவனா் ராமதாஸிடம் விரிவாக விளக்கிப் பேசினோம். அவா் மனுக்களைப் படித்துவிட்டு, உங்களுக்கு ஆதரவாக குரல்கொடுப்பேன், பிறரையும் ஆதரவளிக்க அறிவுறுத்துவேன் என்றாா். இது குடும்ப சந்திப்புபோல மன நிறைவாக அமைந்தது என்றாா்.