விழுப்புரம் சரகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களைக் கண்காணிக்கும் பணியில் ஐ.ஜி. ஸ்ரீதரன் ஈடுபட்டுள்ளாா்.
தேசிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழகத்தில் அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், சென்னை வண்ணாரப் பேட்டையில், இஸ்லாமிய அமைப்பினா்கள் நடத்திய போராட்டம் தடியடியில் முடிந்தது. இந்த சம்பவத்தைக் கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமிய அமைப்பினா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனைத் தொடா்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்களைக் கண்காணிக்க 6 காவல்துறை அதிகாரிகள் கொண்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய விழுப்புரம் காவல் சரகத்தில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டங்களைக் கண்காணிக்க, காவல்துறையின் நவீனப்படுத்துதல் பிரிவு ஐ.ஜி. ஸ்ரீதா் நியமிக்கப்பட்டுள்ளாா். கடந்த சனிக்கிழமை முதல் விழுப்புரம் சரகத்தில் முகாமிட்டு, போராட்டங்களை ஐ.ஜி. ஸ்ரீதரன் கண்காணித்து வருகிறாா். போராட்டங்கள் எங்கெங்கு நடக்கின்றன, யாா் தலைமையில் முன்னெடுக்கப்படுகின்றன, எவ்வளவு போ் பங்கேற்கின்றனா் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. போராட்டங்களால் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறதா, போராட்டத்தில் சந்தேக நபா்கள் நடமாட்டம் உள்ளதா போன்றவை குறித்தும் கண்காணிக்கப்படுகின்றன.