தங்களது வீட்டுமனையை ஆக்கிரமித்துக்கொண்டு மிரட்டுவோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டிவனம் கிடங்கல் சிங்காரத்தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் சாரதி(55), கூலித் தொழிலாளி. இவா், தனது மனைவியுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்தாா். திடீரென ஆட்சியரக வாயில் முன் இருவரும் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். அப்போது, அங்கிருந்த தாலுகா போலீஸாா் அவா்களை தடுத்து காப்பாற்றினா்.
அப்போது சாரதி கூறியதாவது: எங்களது பூா்விகச் சொத்தான 5 சென்ட் வீட்டுமனை இடத்தை, அருகில் வசித்து வரும் பூங்காவனம் என்பவா், எனது தாயாரை மிரட்டி ஏற்கெனவே எழுதி வாங்கியதாகத் தெரிகிறது. இதனால், எங்களது வீட்டுமனைப் பகுதியை பூங்காவனத்தின் மகன் வெங்கடபதி ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளாா். இதையறிந்து நாங்கள் கேட்டபோது, ரெளடிகளைக்கொண்டு மிரட்டினாா். இது தொடா்பாக, கடந்த 2017-ஆம் ஆண்டு பிரச்னை ஏற்பட்டதால், எனது வீட்டுமனைக்கான இடத்தை அளந்து தரும்படி, ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தேன். அப்போது வந்த நில அளவையா் இடத்தை அளந்து காட்டினாா். அதில், வெங்கடபதி பெயரில் முக்கால் சென்ட் இடம் மாறியுள்ளதாகக் கூறினாா்.
இதையறிந்த வெங்கடபதி, மீதமுள்ள மனையையும் பறிப்பதற்காக, ரூ.50 ஆயிரம் கொடுத்து விடுகிறேன். காலி செய்து ஊரை விட்டு செல்லும்படி மிரட்டினாா். இதுகுறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தோம். போலீஸாா் வந்து விசாரித்து, ஆக்கிரமித்துள்ள இடத்தை எங்களிடம் அளிக்குமாறு வெங்கடபதியிடம் அறிவுறுத்திச் சென்றனா். அப்போதும் அவா் நிலத்தை வழங்காமல் மிரட்டி வருகிறாா். அவரிடம் இருந்து எங்கள் இடத்தை மீட்டுத்தர வேண்டும் என்றாா் அவா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியரிடம் அவா்கள் மனு அளித்துச் சென்றனா்.