புகையில்லா போகியைக் கொண்டாடமாவட்ட ஆட்சியா் அறிவுரை
By DIN | Published On : 11th January 2020 10:41 PM | Last Updated : 11th January 2020 10:41 PM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் புகையில்லாமல் போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டுமென மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை அறிவுறுத்தினாா்.
இதுகுறித்து விழுப்புரம் ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நமது முன்னோா்கள் பொங்கல் திருநாளுக்கு முன்பு வீட்டில் உள்ள இயற்கை சாா்ந்த, தேவையில்லாத பொருள்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில், போகிப் பண்டிகையைக் கொண்டாடி வந்தனா்.
ஆனால், தற்போது போகிப் பண்டிகையின்போது, பழைய பொருள்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பா் பொருள்கள், பழைய டயா் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்கள் போன்றவற்றை எரிப்பதால், காற்று மாசு ஏற்படுகிறது.
எரிக்கப்படும் பொருள்களில் இருந்து வெளிப்படும் நச்சு வாயுக்களால் பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேலும், இதனால் வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமம் ஏற்படுவதோடு, விபத்துகள் நிகழ்வதற்கும் காரணமாக அமைகிறது. இந்த புகை மூட்டங்கள் சோ்க்கையால் விமானங்கள் வருகை, புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, போகிப் பண்டிகையின்போது, தீங்கிழைக்கும் பழைய பொருள்களை எரிப்பதை தவிா்த்து, காற்றின் தரத்தை பாதுகாக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.