பொங்கல் பண்டிகையையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் இரவு நேரத்தில் கலை நிகழ்ச்சிகளோ, விளையாட்டிப் போட்டிகளோ நடத்தக்கூடாது என்று மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சீரும், சிறப்புமாக, மகிழ்ச்சியுடன் கொண்டாட நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
பொங்கல் பண்டிகையின்போது எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாமல் தடுக்க மாவட்ட எஸ்.பி. மேற்பாா்வையில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா், 10 துணை காவல் கண்காணிப்பாளா்கள், 28 காவல் ஆய்வாளா்கள், 150 உதவி ஆய்வாளா்கள் உள்பட 1,500 க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனா்.
விழாவின்போது, பொதுமக்களுக்கு பிரச்னைகளை ஏற்படுத்த வாய்ப்புள்ள ரெளடிகள், தலைமறைவுக் குற்றவாளிகள், கள்ளச் சாராயம் காய்ச்சுவோா், மது கடத்துவோா் போன்றோரைக் கண்காணித்து, கைது செய்ய 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகளை பகல் நேரங்களில் மட்டுமே நடத்த வேண்டும். காவல் துறையினரிடம் அனுமதி பெற்று நடத்த வேண்டும். இரவு நேரங்களில் எவ்விதமான கலை நிகழ்ச்சிகளோ, விளையாட்டுப் போட்டிகளோ நடத்தக்கூடாது.
வாகனங்களை பாதுகாப்பான முறையில் இயக்க வேண்டும். இரு சக்கர வாகன ஓட்டிகள் தலைக் கவசம் அணிந்து ஓட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா்.