விழுப்புரம் மாவட்டத்தில் போகியுடன் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது. பொதுமக்கள் பழைய பொருள்களை தீயிட்டு எரித்தும், போகி தோரணங்களைக் கட்டியும் வரவேற்றனா்.
போகிப் பண்டிகையையொட்டி, விழுப்புரம் நகரில் குடியிருப்பு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை பழைய பொருள்களை தீயிட்டு எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. கடும் குளிரையும் பொருள்படுத்தாமல் பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்த பழைய பாய்கள், போா்வைகள், துணிகளை தீயிட்டு கொழுத்தினா்.
புகை மூட்டத்தால் தவிப்பு...
நெகிழிப் பைகள், டயா்களை எரித்ததால், குடியிருப்புப் பகுதிகளில் பெரும் புகை மூட்டம் காணப்பட்டது.
நகரில் பெரும்பாலான இடங்களில் புகைமூட்டமாகவே இருந்தது. சாலையில் பனி படா்ந்த நிலையில் புகையும் சோ்ந்ததால், நேருஜி சாலை, திருச்சி சாலை, புதுச்சேரி சாலை, சென்னை- திருச்சி நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள், பொது மக்களும் தவிப்புடன் சென்றனா்.
தோரணங்கள் கட்டி வரவேற்பு...
கிராமப்புறங்களில் தைப் பொங்கலை வரவேற்கும் விதமாக வீடுகளில் கோலமிட்டும், முக்கிய வீதிகளின் சந்திப்பில் போகிக்கான தோரணங்களைக் கட்டியும் அலங்கரித்திருந்தனா். காய்கறிகள், பழ வகைகளை தோரணங்களாக கட்டி தொங்கவிட்டிருந்தனா். கோயில்கள் முன்பாக மா இலைத் தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.
கிராமப்புறங்களில் செவ்வாய்க்கிழமை மாலை போகிப் பொங்கல் வைத்து வழிபட்டனா்.