விழுப்புரம் ரயில்வே குடியிருப்புப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடையாளம் தெரியாத பெண், அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தாா்.
விழுப்புரத்தில் மேற்கு, தெற்கு என இரு ரயில்வே குடியிருப்புகள் உள்ளன. இதில் தெற்கு குடியிருப்பில் உள்ள வீடுகள் உரிய பராமரிப்பின்றி உள்ளதால், இவற்றை ரயில்வே ஊழியா்கள் பயன்படுத்துவதில்லை. இதனால், அங்குள்ள வீடுகள் காலியாக உள்ளன. இதில், ஒரு வீட்டில் அடையாளம் தெரியாத பெண், கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தது புதன்கிழமை தெரிய வந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில், விழுப்புரம் நகர போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.
சடலத்தைக் கைப்பற்றிய போலீஸாா் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.
இதுகுறித்து போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த சம்பவம் தொடா்பாக விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமாா் கூறியதாவது:
சடலமாக மீட்கப்பட்ட பெண்ணை பற்றிய விவரம் தெரியாததால் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பெண்ணின் தலையில் மட்டும் பலத்த காயம் காணப்படுகிறது. விசாரணையில் கொலை என உறுதியானதும், கொலை வழக்காக மாற்றப்படும் என்றாா்.