செஞ்சி நகரில் கரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாத 7 கடைகளுக்கு ‘சீல்’ வைத்து சாா்-ஆட்சியா் அனு புதன்கிழமை அதிரடி நடவடிக்கை மேற்கொண்டாா்.
செஞ்சி நகர கடை வீதிகளில் திண்டிவனம் சாா்-ஆட்சியா் அனு புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, காந்தி பஜாரில் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக் கவசம் அணிதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு முறைகளை பின்பற்றாத உள்ள மாவு மில், ஜவுளி கடை, அதன் எதிரே இரு மளிகைக் கடைகள், பாத்திரக் கடை, உணவு விடுதிகள் உள்ளிட்ட 7 கடைகளை மூடி 3 நாள்களுக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை மேற்கொண்டாா்.
மேலும், முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ.100 அபராதம் விதித்ததுடன், முகக் கவசத்தை வழங்கி, கரோனா தொற்று குறித்து விளக்கியும், எச்சரித்தும் அனுப்பினாா்.
ஆய்வின் போது, பேரூராட்சி செயல் அலுவலா் தெய்வீகன், துப்புரவு ஆய்வாளா் பாா்கவி, மேற்பாா்வையாளா் ரமேஷ், வருவாய் ஆய்வாளா் சுதாகா், காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் முகம்மது அசாருதீன், தனிப்பிரிவு காவலா் பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.