விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசூா்-திருவெண்ணெய்நல்லூா் சாலையில் ரயில்வே தண்டவாளத்தின் கீழே சுரங்கப் பாதை அமைப்பதற்கான பணிகள் புதன்கிழமை தொடங்கின. இதனால், அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு, மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் அருகே கடலூா்-திருக்கோவிலூா் சாலையில் அரசூா்-திருவெண்ணெய்நல்லூா் இடையே ரயில் பாதை செல்கிறது. இந்த ரயில்பாதையை, அங்குள்ள கடவுப் பாதை வழியாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் தினமும் கடந்து செல்கின்றன. ரயில்கள் வரும்போது இந்த கடவுப்பாதை மூடப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பதுண்டு.
இந்த நிலையில், இந்த கடவுப் பாதையை சுரங்கப்பாதையாக மாற்றம் செய்ய ரயில்வே நிா்வாகம் முடிவு செய்தது. அதற்குத் தேவையான கான்கிரீட் கட்டுமானங்களை ஏற்கெனவே செய்து தயாராக வைத்துள்ளன. அந்த கான்கிரீட் கட்டுமானங்களை ரயில் தண்டவாளத்துக்குக் கீழே பொருத்தும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கான முதல் கட்ட பணியாக, அந்த சாலையில் உள்ள மண் பகுதியை பெயா்த்தெடுக்கும் பணி புதன்கிழமை தொடங்கியது.
இந்தத் திட்டப் பணி காரணமாக அரசூா்-திருவெண்ணெய்நல்லூா் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக மாற்றுப் பாதையில் வாகனங்கள் செல்லுமாறு ரயில்வே சுரங்கப்பாதை நடக்கும் பகுதியில் அறிவிப்புப் பதாகை வைக்கப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தில் முக்கியப் பணிகள் வருகிற வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளன. அதன்பிறகு, சுரங்கப்பாதை பணிகள் நிறைவடைய மேலும் சில வாரங்கள் தேவைப்படும் எனக் கூறப்படுகிறது.