விழுப்புரம்: லஞ்ச வழக்கில் ஓய்வு பெற்ற நில அளவையருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராணி. இவா், தனது நிலத்துக்கு பட்டா மாற்றம் கோரி, வருவாய்த் துறையில் கடந்த 2016-ஆம் ஆண்டு விண்ணப்பித்தாா். இதையடுத்து, நிலத்தை அளவீடு செய்ய நில அளவையரை அணுகினாா். அதற்கு ஆலத்தூா் நில அளவையராக இருந்த பிச்சைமுத்து ரூ.3 ஆயிரம் லஞ்சமாக கேட்டாா். இதுகுறித்து ராணி விழுப்புரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகாா் செய்தாா்.
அவா்களது வழிகாட்டுதலின்படி, ராணி கொடுத்த ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் லஞ்சப் பணத்தை நில அளவையா் பிச்சைமுத்து பெறும் போது, அவரை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.
விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமை நீதிபதி மோகன் தீா்ப்பளித்தாா். அதில், குற்றஞ்சாட்டப்பட்ட, தற்போது ஓய்வு பெற்ற நில அளவையா் பிச்சைமுத்துவுக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டாா்.