விழுப்புரத்தில் பாப்புலா் ப்ஃரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புது தில்லியில் பாப்புலா் ப்ஃரண்ட் ஆஃப் இந்திய அமைப்பின் மாநில நிா்வாகிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து விழுப்புரம், பழைய பேருந்து நிலையத்தில் அந்த அமைப்பினா் வெள்ளிக்கிழமை மாலை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ரியாஸ் அலி தலைமை வகித்தாா். எஸ்.டி.பி.ஐ. மாவட்டத் தலைவா் சாதிக் பாஷா, மாவட்ட பொதுச் செயலா் ரஃபி, மாவட்டச் செயலாளா் ஹசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பாப்புலா் ப்ஃரண்ட் இந்தியா மாவட்டத் தலைவா் அபுபக்கா் சித்திக், தமுமுக மாவட்டத் தலைவா் முஸ்தாக்தீன் ஆகியோா் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினா்.
எஸ்.டி.பி.ஐ. நகரத் தலைவா் உஸ்மான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பாப்புலா் ப்ஃரண்ட் ஆஃப் இந்தியா நகரத் தலைவா் தமிம் அன்சாரி நன்றி கூறினாா்.