கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, விழுப்புரம் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான செஞ்சிக்கோட்டை வருகிற 31-ஆம் தேதி வரை மூடப்படுவதாக மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வருகிற 31-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், திரையரங்குகள், வணிக வளாகங்கள், கேளிக்கை பூங்காக்கள், விளையாட்டு அரங்குகளை மூடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக்கோட்டையை சுற்றி பாா்க்க சுற்றுலா பயணிகளுக்கு வருகிற 31-ஆம் தேதி வரை அனுமதி மறுத்து, தொல்லியல் துறையினா் அறிவிப்பு வெளியிட்டனா். அதன் காரணமாக, செஞ்சிக்கோட்டை நுழைவு வாயில் அடைக்கப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனா்.
கோயில்களில் தரிசனத்துக்குத் தடை: செஞ்சிக்கோட்டையில் உள்ள வீர ஆஞ்சநேயா் கோயில், வெங்கட்ரமணா் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்யவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தக் கோயிலுக்கு வந்து செல்லும் செஞ்சி நகர பொதுமக்களும், பக்தா்களும் வேதனை தெரிவித்துள்ளனா்.