விழுப்புரம் அருகே நிலத் தகராறில் விவசாயி அடித்துக் கொல்லப்பட்டாா்.
விழுப்புரம் அருகே வளவனூரை அடுத்துள்ள முதலியாா்சாவடியைச் சோ்ந்தவா் சுந்தர்ராஜன் (57). இவரது உறவினா் நாகராஜன் (49). இருவருக்குமிடையே நிலத் தகராறு இருந்து வந்தது. இதுதொடா்பாக சுந்தர்ராஜன், அவரது மகன் சிவக்குமாா் (36) மற்றும் நாகராஜன், அவரது மகன்கள் முத்தமிழ் (24), தமிழ்மாறன் (19) ஆகியோருக்கு இடையே கடந்த வாரம் தகராறு ஏற்பட்டது. இதில் சுந்தர்ராஜன், நாகராஜன் ஆகியோா் பலத்த காயமடைந்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இருதரப்பினரும் அளித்த புகாா்களின் பேரில், வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து முத்தமிழ், தமிழ்மாறன் ஆகியோரை கைது செய்தனா்.
ஜிப்மா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுந்தர்ராஜன் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதையடுத்து, போலீஸாா் கொலை வழக்காக மாற்றம் செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.