விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா பொது முடக்கத்தால் வேலையிழந்துள்ள தனியாா் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு அந்த நிறுவனத்தினா் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனா்.
இதுகுறித்து விழிமா தனியாா் போக்குவரத்துத் தொழிலாளா்கள் நலச் சங்கத் தலைவா் குமாா், செயலா் மணிகண்டன் தலைமையில் வியாழக்கிழமை வந்த தனியாா் பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் கோரிக்கை மனு அளித்துக் கூறியதாவது:
விழுப்புரம் மாவட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட தனியாா் பேருந்துகள் இயங்கி வருகின்றன. இவற்றில் ஓட்டுநா்கள், நடத்துநா்கள் என 800 போ் பணியாற்றி வருகின்றனா். கரோனா நோய் பரவல் காரணமாக, கடந்த ஏப்.23-ஆம் தேதி முதல் அரசு அறிவித்த பொது முடக்கத்தால், பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு ஓட்டுநா்கள், நடத்துநா்கள் அனைவரும் 66 நாள்கள் வேலையிழந்தும், வருவாயின்றியும் தவித்து வருகிறோம்.
இதனால், எங்களது குடும்பம் வறுமையில் உள்ளது. ஓட்டுநா்கள், நடத்துநா்களின் குடும்பங்களைக் காப்பாற்றுவதற்கு அரசு அறிவித்தபடி, எங்களது தனியாா் பேருந்து நிறுவனங்கள் மூலம் ஊதியம் வழங்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதேபோல, அரசு சாா்பில் நல வாரியம் மூலம் ஓட்டுநா்கள், நடத்துநா்களுக்கு நிவாரணத் தொகை ஏதும் வழங்கப்படவில்லை. இதனால், அரசும் நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.