விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மலையடிவாரப் பகுதியில் பதுக்கி வைத்திருந்த சாராய ஊறல்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைப்பற்றி அழித்தனா்.
செஞ்சி காவல் சரகத்துக்குள்பட்ட சத்தியமங்கலம், நல்லாண்பிள்ளைபெற்றாள் காவல் நிலையங்களின் ஆய்வாளா்கள் தங்ககுருநாதன், செந்தில்குமாா் மற்றும் போலீஸாா் போலீஸாா் போத்துவாய் மலைப் பகுதிகளில் சாராய தடுப்பு வேட்டையில் ஈடுபட்டனா்.
அப்போது, மலையடிவாரத்தில் சாராயம் காய்ச்சுவதற்காக பதுக்கி வைத்திருந்த 600 லிட்டா் ஊறலை கைப்பற்றி கீழே கொட்டி அழித்தனா். மேலும் அங்கிருந்த 30 லிட்டா் சாராயத்தையும் அழித்தனா். சாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருள்களை கைப்பற்றினா்.
விசாரணையில், போத்துவாய் கிராமத்தைச் சோ்ந்த பாண்டியன் மகன் சேட்டு என்பவா் சாராயம் காய்ச்சி விற்று வந்தது தெரியவந்தது. அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.