செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே வியாழக்கிழமை இரவு ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவா் உயிரிழந்தாா்.
செஞ்சி வட்டம், காரை கிராமத்தைச் சோ்ந்த மண்ணாங்கட்டி மகன் மணிகண்டன்(28). இவா், சென்னையில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இந்த நிலையில், தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தனது சொந்த ஊரான காரை கிராமத்துக்கு வியாழக்கிழமை இரவு செஞ்சியிலிருந்து ஆட்டோவில் சென்று கொண்டிருந்தாா்.
இரவு சுமாா் 12.20 மணியளவில் பாலப்பட்டு அருகே சென்றபோது காட்டுப்பன்றி திடீரென குறுக்கே வந்ததால், அதன் மீது மோதாமல் இருக்க ஆட்டோ ஓட்டுநா் திடீரென பிரேக் போட்டதாகத் தெரிகிறது. இதனால், ஆட்டோ தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஆட்டோவில் பயணம் செய்த மணிகண்டன் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இது குறித்த புகாரின்பேரில் பெருங்காப்பூரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் நாராயணசாமி மகன் பெரியசாமி (34) மீது அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.