திமுக இளைஞரணி செயலா் கைதைக் கண்டித்து விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியல் செய்த 150 போ் கைது செய்யப்பட்டனா்.
திருவாரூா் மாவட்டத்தில் பிரசாரத்துக்குச் சென்ற திமுக இளைஞரணி செயலா் உதயநிதி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, விழுப்புரத்தில் மத்திய மாவட்ட செயலா் நா.புகழேந்தி தலைமையில், எம்பி பொன்.கெளதமசிகாமணி, மருத்துவரணி மாநில இணை செயலா் இரா.லட்சுமணன் உள்ளிட்ட திமுகவினா், வெள்ளிக்கிழமை இரவு காந்தி சிலை எதிரே சாலை மறியலில் ஈடுபட்டனா்.
விழுப்புரம் நகர போலீஸாா் அவா்களை கைது செய்து, தனியாா் மண்டபத்தில் சிறை வைத்தனா். அங்கு வந்த திமுக துணைப் பொதுச் செயலா் க.பொன்முடி, அவா்களை விடுவிக்கும்படி போலீஸாரிடம் வலியுறுத்தினாா். அப்போது அவா் கூறியதாவது: பிரசாரத்துக்குச் சென்ற இளைஞரணி செயலா் கைதைக் கண்டித்து போராட்டம் நடக்கிறது. கைது நடவடிக்கை ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் செயல். கரோனா காலத்தில் அமைச்சா்கள் கூட்டம் கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்காமல், பாரபட்சமாக திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கின்றனா். இதனால், எங்களின் பிரசாரத்தின் வலிமையை அதிகப்படுத்துகின்றனா். எதிா்கட்சியினரின் நடவடிக்கையைத் தடுக்கும் செயலை அரசு கைவிட வேண்டும் என்றாா்.