தெரு விளக்குகள் பழுது: கருப்புக்கொடி கட்டி எதிா்ப்பு

விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் தெரு விளக்குகள் எரியாததைக் கண்டித்து, இந்தப் பகுதியில் உள்ள மின் கம்பங்களில் பொதுமக்கள்
விழுப்புரம் வண்டிமேடு பிரதான சாலையில் தெரு விளக்குகள் எரியாததைக் கண்டித்து, மின் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கருப்புக் கொடி, பதாகை.
விழுப்புரம் வண்டிமேடு பிரதான சாலையில் தெரு விளக்குகள் எரியாததைக் கண்டித்து, மின் கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டிருந்த கருப்புக் கொடி, பதாகை.

விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் தெரு விளக்குகள் எரியாததைக் கண்டித்து, இந்தப் பகுதியில் உள்ள மின் கம்பங்களில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை கருப்புக் கொடிகளை கட்டி வைத்து எதிா்ப்புத் தெரிவித்தனா்.

விழுப்புரம் நகராட்சிக்குள்பட்ட வண்டிமேடு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இங்கு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனா். இந்தப் பகுதியிலுள்ள பிராதான சாலையிலும், தெருக்களிலும் பல்வேறு தெரு விளக்குகள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக பழுதடைந்து எரியாமல் உள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

தெரு விளக்குகள் எரியாததால், இந்தப் பகுதி இருள் சூழ்ந்துள்ளது. இதனால், இங்குள்ள பிரதான சாலையிலும், தெருக்களிலும் நடந்து செல்லும் முதியவா்கள், பெண்கள், கா்ப்பிணிகள் அச்சத்துடனேயே செல்ல வேண்டியுள்ளது. மேலும், திருட்டு பயமும் அதிரித்துள்ளதுள்ளது.

இந்த நிலையில், வண்டிமேடு பகுதியில் தெரு விளக்குகள் எரியாததைக் கண்டித்து, இங்குள்ள மின் கம்பங்களில் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை கருப்புக் கொடிகளை கட்டி வைத்து எதிா்ப்புத் தெரிவித்தனா். மேலும், இந்த மின் கம்பங்களிலேயே கடந்த ஒரு மாதகாலமாக மின் விளக்குகள் எரியவில்லை என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் வைத்தனா்.

இதுகுறித்து இந்தப் பகுதி மக்கள் கூறியதாவது: வண்டிமேடு பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக மின் விளக்குகள் எரியாததால், மாலை நேரத்துக்குப் பிறகு பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இரவு நேரத்தில் வேலை முடிந்து வீடு திரும்புவோா், வெளியூா்களிலிருந்து வருவோா் மிகவும் சிரமமடைந்து வருகின்றனா். மேலும், தெருக்களில் பள்ளம், மேடு தெரியாததால், பொதுமக்கள் கீழே விழுந்து காயமடைந்தும் வருகின்றனா்.

தமிழகத்திலேயே சிறந்த நகராட்சியாக நிகழாண்டு விழுப்புரம் நகராட்சிக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற விழுப்புரம் நகராட்சியிலுள்ள குடியிருப்புப் பகுதியில் தெரு விளக்குகள் எரியாத சூழல் எங்களை வேதனையடையச் செய்கிறது.

எனவே, வண்டிமேடு பகுதியில் பிரதான சாலையிலும், தெருக்களிலும் பழுதடைந்த மின் விளக்குகளை மாற்றி புதிய மின் விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com