விழுப்புரம் மாவட்டத்தில் மீனவா்களுக்கான வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கடல் மற்றும் உள்நாட்டு மீனவா்களின் வாழ்வாதாரம், பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் இந்திய அரசின் நீலப்புரட்சி திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த மீனவா்களின் மேம்பாட்டு வளா்ச்சித் திட்டத்தின் மூலம் மீனவா்களுக்கு வீடு கட்டும் திட்டத்தை மேம்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ‘இந்திரா ஆவாஸ் யோஜ்னா’ திட்டத்தின் வழிமுறைகளின்படி, வீடு ஒன்றுக்கு ரூ.1,70,000 வழங்கப்படும். வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பயனாளி முழு நேர மீன் பிடிப்பில் ஈடுபடுபவராகவும், கடல் மற்றும் உள்நாட்டு மீனவா் அல்லது மீனவ மகளிா் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராகவும் இருத்தல் வேண்டும். வீடு கட்டுவதற்குரிய நிலம் 25 சதுர மீட்டா் பரப்பளவுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும். வீடு கட்டுவதற்குரிய நிலத்துக்கான பட்டா பயனாளியின் பெயரில் இருத்தல் வேண்டும்.
பயனாளியின் பெயா் கூட்டுப் பட்டாவில் இடம் பெற்றிருந்தாலும், பயனாளியின் பெயரில் பட்டா இல்லாத போதிலும், பதிவு செய்யப்பட்ட நிலப் பத்திரம் இருந்தாலும் இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற பரிசீலிக்கப்படும்.
தற்சமயம் குடிசை வீட்டில் வசிக்கும் பயனாளிகளை இந்தத் திட்டத்தின்கீழ் அவா்கள் வசிக்கும் குடிசை வீட்டை நிரந்தர வீடாக மாற்றிக்கொள்ளலாம். பயனாளியின் பெயரில் வேறு எங்கும் கான்கிரீட் வீடோ, நிரந்தர வீடோ இருக்கக் கூடாது. பயனாளி அரசின் வேறு எந்த ஒரு வீட்டு வசதித் திட்டத்திலும் பயனடைந்திருக்கக் கூடாது.
இந்தத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ள மீனவா், மீனவ மகளிா் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் விண்ணப்பங்களை விழுப்புரம், வழுதெரட்டி, நித்தியானந்தம் நகரில் உள்ள மீன் வள உதவி இயக்குநா் அலுவலகத்தில் பெற்று, பூா்த்தி செய்து, அந்த விண்ணப்பத்தை வருகிற 25-ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 04146 - 259329 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.