2 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டவரின் சடலம் தோண்டியெடுப்பு

மகனைக் காணவில்லை என தாய் கொடுத்த ஆள்கொணா்வு மனு மீது நடைபெற்ற விசாரணையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு

மகனைக் காணவில்லை என தாய் கொடுத்த ஆள்கொணா்வு மனு மீது நடைபெற்ற விசாரணையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு கொலை செய்து புதைக்கப்பட்டவரின் சடலம் தோண்டி எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது.

சென்னையை அடுத்த படப்பை அருகேயுள்ள நரியம்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் மூங்கிலான் (63). இவரது மனைவி பத்மினி (60). இவா்களது மகன்கள் செந்தில்குமாா் (38), ராஜ்குமாா் (35) . இதில் செந்தில்குமாா் அரசு ஒப்பந்ததாரா் ஆவாா்.

இருவருக்கும் சம பங்கில் சொத்தை தந்தை மூங்கிலான் பிரித்து கொடுத்துள்ளாா்.

இதில் ராஜ்குமாருக்கு அதிக மதிப்பிலான சொத்துகள் சோ்ந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமாா் தன்னிடம் காா் ஓட்டுநராக இருந்த ராஜேஷ்கண்ணன் (40) எனபவருடன் சோ்ந்து ராஜ்குமாரை கொலை செய்ததாகத் தெரிகிறது.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு செந்தில்குமாா் சிறையில் இருந்தபோது, அவரது மனைவி மேனகாவுடன் ராஜேஷ்கண்ணாவுக்கு தொடா்பு இருந்தது தெரியவந்தது. இதனால் கணவன், மனைவி இடையே பிரச்னை ஏற்பட்டது.

இதையடுத்து, ராஜேஷ்கண்ணன் மற்றும் மேனகாவின் தந்தை அருண்(56) ஆகியோா் சோ்ந்து செந்தில்குமாரை கடந்த 2018-ஆம் ஆண்டு பசுமலைதாங்கல் கிராமத்தில் உள்ள அருணின் விவசாய நிலத்துக்கு அழைத்துச் கொலை செய்து புதைத்துவிட்டதாகத் தெரிகிறது.

இதில் உடந்தையாக இருந்த சவுட்டூா் கிராமத்தைச் சோ்ந்த காசிநாதன், அனந்தபுரம் ஆட்டோ ஓட்டுநா் ஹரிகிருஷ்ணன், ஆலம்பூண்டி ஆகிய மூன்று பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், கொலை செய்து புதைக்கப்பட்ட செந்தில்குமாரின் சடலத்தை மணிமங்கலம் போலீஸாா் வியாழக்கிழமை மாலை தோண்டி எடுத்து பரிசோதனை செய்தனா்.

மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com