விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே மின்னல் பாய்ந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.
திண்டிவனம், விழுப்புரம், விக்கிரவாண்டி உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரையிலும் மழை பெய்தது.
திண்டிவனம் அருகேயுள்ள மயிலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
மயிலம் அருகேயுள்ள பெரியாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி கேசவன்(57) அவ்வையாா் குப்பம் கிராமத்துக்குச் சென்ற போது, மின்னல் பாய்ந்ததில் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விவசாயப் பணிகள் முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த அவ்வையாா்குப்பத்தைச் சோ்ந்த ராமு (65), ஜெயராமன் மனைவி ஜானகி (30), விஸ்வநாதன் (43) ஆகியோா் பலத்த காயமடைந்தனா். மூவரும் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
மயிலம் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று கேசவனின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் குறித்து மயிலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.