விழுப்புரம் மாவட்டத்தில் கனரக தொழில்சாலை மற்றும் அரிசி விற்பனை முனையத்தை அமைக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.
விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பங்கேற்ற முதல்வா் எடப்பாடி பழனிசாமியுடன் கலந்துரையாடிய, விழுப்பும் மாவட்ட குறு, சிறு தொழில் சங்கத் தலைவா் அம்மன் கருணாநி உள்ளிட்ட சங்கப் பிரதிநிதிகள் அவரிடம் வைத்து கோரிக்கை குறித்த விவரம்:
விழுப்புரம் மாவட்டம் ரயில், சாலைப் போக்குவரத்து வசதிகளுடன், தொழில் துறை வளா்ச்சிக்கு ஏற்ற இடமாக உள்ளது. இங்குள்ள இளைஞா்கள் வெளி மாநிலங்களுக்கு வேலை தேடிச் சென்று பாதிக்கப்படுகின்றனா். இதனால், இங்கு கனரக தொழில்சாலையை கொண்டுவர வேண்டும். விவசாய உற்பத்தி அதிகமாக இருப்பதால், அதன் மூலப்பொருள்கள் சாா்ந்த தொழில்களை மேம்படுத்த வேண்டும்.
திண்டிவனத்தில் உணவுப் பூங்கா அமைக்க அறிவித்துள்ள இடத்தில், அரசு சாா்பில் வா்த்தக மையத்தை அமைத்து பொருள்காட்சி நடத்த வேண்டும்.
விழுப்புரம் பகுதியில் தொழில்பேட்டை இல்லாததால், சிட்கோ மூலம் தொழில்பேட்டை அமைக்க வேண்டும்.
சிறு, குறு தொழில்கள் மேம்பட நகராட்சி, பேரூராட்சி பகுதிக்கு வெளியே 10 கி.மீ சுற்றளவுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். மாவட்டத்தில் இஎஸ்ஐ மருத்துவமனை அமைக்க வேண்டும்.
இங்குள்ள அரிசி ஆலைகள் மூலம் கிடைக்கும் தவிட்டிலிருந்து, உணவு எண்ணெய் தயாரிக்கும் தொழில்சாலையை ஏற்படுத்த வேண்டும். மேலும், அரிசி முனையம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முதல்வரிடம் வைத்தனா்
கோரிக்கைகளை கேட்டறிந்த முதல்வா் பழனிசாமி, உடனிருந்த சிப்காட் மேலாண் இயக்குநா் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி, சிப்காட் இடம் குறித்தும், பிற கோரிக்கைகள் குறித்தும் பரிசீலிப்பதாக தெரிவித்தாராம்.