திண்டிவனம் அருகே கத்தியை காட்டி மிரட்டி ரூ. 1.5 கோடி மதிப்பிலான வைர நகைகள் வழிப்பறி
திண்டிவனம் அருகே கத்தியை காட்டி மிரட்டி ரூ. 1.5 கோடி மதிப்பிலான வைர நகைகள் வழிப்பறி செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் ஆசாரம்குப்பத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி 55. இவர் தனது பூர்வீக வைர மோதிரங்கள் 4 வைத்திருந்தார். இதனை விற்பதற்காக சென்னையைச் சேர்ந்த இடைத்தரகர்கள் மூலம் ஏற்பாடு செய்தார். இதன்படி ஞாயிற்றுக்கிழமை மாலை அந்த இடைத்தரகர்களை, திண்டிவனம் அருகே கூட்டேரிப்பட்டு பகுதியில் சந்தித்து காரில் சென்று நகையை காட்டியுள்ளனர்.
மற்றொரு காரில் வந்திருந்த இடைத்தரகர்கள், அவர்கள் பின்னால் வந்த மற்றொரு கார் இவர்களை கண்காணித்துள்ளது. இந்த நிலையில் பணம் தருவதற்காக அருகே உள்ள தீவனூர் சாலைக்கு, அந்த கும்பல் அழைத்துச் சென்றுள்ளது. இதனை நம்பி சென்ற கருணாநிதியும் அவரது நண்பருமான பிரகலாதன் என்பவரையும் மிரட்டி, கண்ணில் மிளகாய் பொடி தூவி விட்டு வைர நகைகள் மற்றும் அவர்களின் கழுத்தில் இருந்த சங்கிலி உள்ளிட்டவையை அந்த மர்ம கும்பல் பறித்துச் சென்றது.
இது குறித்த புகாரின் பேரில் விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், திண்டிவனம் துணை கண்காணிப்பாளர் கணேசன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். நகையின் மதிப்பு ரூ.1.5 கோடி ஆகும்.