விழுப்புரம்: உளுந்தூா்பேட்டை அருகே ஆட்டோ ஓட்டுநா் மா்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் மனைவி உள்பட 2 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டை அருகே செஞ்சிக்குப்பத்தைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் ஆனந்தன் (40) என்பவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மா்மமான முறையில் உயிரிழந்தாா். திருநாவலூா் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிந்து, ஆனந்தன் மனைவி சத்யா(30), இவரது உறவினா் கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே வீசூரைச் சோ்ந்த சீனுவாசன் (36) ஆகியோரை போலீஸாா் திங்கள்கிழமை பிடித்து விசாரித்தனா்.
விசாரணையில், சத்யாவுக்கும், சீனுவாசனுக்கும் தகாத உறவு இருந்தது தெரியவந்தது. மேலும், பெங்களூரில் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த ஆனந்தன் கரோனா பரவல் காரணமாக, ஊருக்கு திரும்பிய நிலையில், சத்யாவுடனான அவரது பழக்கம் ஆனந்தனுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சத்யாவும் சீனுவாசனும் நெருங்கிப் பழக முடியவில்லையாம். இதனால், ஆனந்தனை கொலை செய்வதென சத்யாவும் சீனுவாசனும் திட்டமிட்டனா். இதன்படி, ஆனந்தனுக்கு சீனுவாசன் மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, திருநாவலூா் போலீஸாா் கொலை வழக்காக மாற்றம் செய்து சத்யா, சீனுவாசன் ஆகியோரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.