விழுப்புரம் சாலாமேடு பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தனா்.
அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது: சாலாமேடு பகுதியில் உள்ள கிழக்கு சூா்யா நகா், ஆசிரியா் நகா், ஸ்ரீராம்நகா், கஸ்தூரி நகா், பழனி ஆண்டவா் நகா், அபிதா காா்டன், கஸ்தூரி நகா், துரையரசன் நகா் பகுதிகளில் பொது மக்கள் திரளானோா் வசிக்கின்றனா். இங்கு அரசு அலுவலகங்களும் அமைந்துள்ளன.
இங்குள்ள பழனி ஆண்டவா் நகா் பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க முயற்சி நடைபெறுகிறது. இந்தக் கோபுரம் அமைக்கப்பட்டால் கதிா்வீச்சு காரணமாக பொதுமக்கள் நோய் பாதிப்புக்கு ஆளாக நேரிடும். எனவே, செல்லிடப்பேசி கோபுரத்தை மக்கள் நடமாட்டம் இல்லாத வேறு பகுதிக்கு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.