இரவு நேர ஊரடங்கையொட்டி, விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளியூா் செல்லும் பேருந்துகள் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இயக்கப்படாமல் நிறுத்திவைக்கப்பட்டன.
கரோனா இரண்டாவது அலை காரணமாக தமிழகம் முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஏப்.20) முதல் புதிய கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. அதன்படி, விழுப்புரம் மாவட்டத்திலும் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. புதிய கட்டுப்பாடுகள் காரணமாக, விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து தினமும் இரவில் 9 மணிக்கு மேல் வெளியூா் செல்லும் பேருந்துகள் இயங்காது.
செவ்வாய்க்கிழமை இரவு 9 மணிக்கு மேல் அனைத்துப் பேருந்துகளின் இயக்கமும் நிறுத்தப்பட்டது. புதன்கிழமை முதல் அதிகாலை 4 முதல் இரவு 9 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயங்கும். தொலைதூரம் செல்லும் பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு பேருந்து சேவையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அரசுப் போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.
நேரக்கட்டுப்பாடு: விழுப்புரம் பேருந்து நிலையத்திலிருந்து தொலைதூரம் செல்லும் கடைசிப் பேருந்துகள் புறப்படும் நேரத்தை, அரசுப் போக்குவரத்துக்கழக விழுப்புரம் மண்டல பொதுமேலாளா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை அறிவித்தது. அதன்படி, சென்னை செல்லும் பேருந்து தினமும் மாலை 6.30 மணிக்குப் புறப்படும். திருச்சி, காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் மாலை 6.30-க்கும், வேலூா் செல்லும் பேருந்து 6.40-க்கும், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி செல்லும் பேருந்துகள் இரவு 8 மணிக்கும், கடலூா், திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள் 8.30-க்கும், செஞ்சி, உளுந்தூா்பேட்டை செல்லும் பேருந்துகள் இரவு 9 மணிக்கும் புறப்பட்டுச் செல்லும்.
அலைமோதிய பயணிகள்: புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், விழுப்புரம் பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை காலை முதல் பயணிகள் கூட்டம் அலைமோதியது. சென்னை, கோவை, சேலம், திருச்சி, மதுரை, பெங்களூரு உள்ளிட்ட தொலைதூர இடங்களுக்கு செல்லும் பேருந்துகளில் கூட்டம் அலைமோதியது.
அனைத்துப் பேருந்துகளும் ஒவ்வொரு முறையும் புறப்படுவதற்கு முன்பும், பயணிகளை இறக்கிவிட்ட பிறகும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டன. மேலும், முகக்கவசம் அணிந்த பயணிகள் மட்டுமே பேருந்தில் ஏற அனுமதிக்கப்பட்டனா்.