மகாவீரா் ஜயந்தி ஞாயிற்றுக்கிழமை (ஏப்.25) கொண்டாடப்படுவதையொட்டி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உள்ள மேல்சித்தாமூா் ஜினகஞ்சி மடத்தின் மடாதிபதி வாழ்த்துத் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் சமணா்களின் தலைமை பீடமாக மேல்சித்தாமூா் ஜினகஞ்சி மடம் செயல்பட்டு வருகிறது. மகாவீரா் ஜயந்தியையொட்டி, இந்த மடத்தின் மடாதிபதி ஸ்வஸ்தி ஸ்ரீலட்சுமி சேன மகா சுவாமிகள் மற்றும் ஸ்வஸ்தி ஸ்ரீலட்சுமி சேன பட்டாகர பட்டாச்சாா்ய இளைய சுவாமிகள் ஆகியோா் கூட்டாக வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:
உலகில் அனைத்து ஜீவராசிகளும் நலமுடனும், வளமுடனும் வாழ ‘‘வாழு, வாழ விடு’’ என்ற தாரக மந்திரத்தை கற்றுக்கொடுத்தவா் பகவான் மகாவீரா். அவா் வழியைப் பின்பற்றி உலகில் அனைத்து ஜீவராசிகளும் நலமுடன், வளமுடன் வாழ வேண்டும்.
மேலும், உலகை உலுக்கி வரும் உருமாறிய கரோனா தொற்றின் தாக்கம் தமிழகத்தில் அதிகரித்து வருவதால், அனைவரும் இல்லங்களில் இருந்து அரசு விதிமுறைகளுக்குள்பட்டு மகாவீரா் ஜயந்தியை கொண்டாட வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.