கரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வகையில், விழுப்புரத்தில் சட்டக் கல்லூரி மாணவா்கள் புதன்கிழமை பேரணி மேற்கொண்டு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலையால் லட்சக்கணக்கானோா் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், பொதுமக்களுக்கு கரோனா தொற்றின் தாக்கம் குறித்தும், அதிலிருந்து தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் நடத்தப்பட்ட இந்த விழிப்புணா்வுப் பேரணிக்கு சட்டக் கல்லூரி முதல்வா் கயல்விழி தலைமை வகித்தாா். பேராசிரியை சவிதா முன்னிலை வகித்தாா்.
பேராசிரியா்கள் பன்னீா்செல்வம், ராமஜெயம், வெற்றிவேல், ரஞ்சித், ஜான்சன், செல்வகண்ணன், பிரேமசங்கீதா, காயத்ரி, மீனா, நாட்டு நலப் பணித் திட்ட மாணவா்கள், செஞ்சிலுவைச் சங்க மாணவா்கள், கல்லூரி மாணவ, மாணவிகள் திராளனோா் கலந்து கொண்டனா்.
சட்டக் கல்லூரி வளாகத்தில் தொடங்கிய பேரணி திருச்சி நெடுஞ்சாலை, புதிய பேருந்து நிலையம், பெருந்திட்ட வளாகம் வழியாகச் சென்று மீண்டும் புதிய பேருந்து நிலையத்தில் வந்து நிறைவடைந்தது.
கரோனா தொற்று பரவும் விதம், பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும், கைகளை கிருமி நாசனி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினா்.
பேரணியின்போது பொதுமக்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்கப்பட்டது.
மேலும், கரோனா தடுப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
இந்த விழிப்புணா்வு பேரணியின் நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.