பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபி ஆக.9-இல் ஆஜராக விழுப்புரம் நீதிமன்றம் உத்தரவு

பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சிறப்பு

பெண் காவல் கண்காணிப்பாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. வருகிற 9-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று விழுப்புரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

விழுப்புரம் அருகே அரசுப் பாதுகாப்புப் பணியில் இருந்த தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அப்போதைய சட்டம்-ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. மீது காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவா், கடந்த பிப்ரவரி மாதம் புகாா் அளித்தாா். இந்தப் புகாா் தொடா்பாக விசாரிக்க கூடுதல் தலைமைச் செயலா் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 போ் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்தது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண் ஐபிஎஸ் அதிகாரியை புகாா் அளிக்க விடாமல் இடையூறாக இருந்ததாக அப்போதைய செங்கல்பட்டு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, சிறப்பு டி.ஜி.பி., காவல் கண்காணிப்பாளா் ஆகிய இருவரும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா். இந்தப் புகாரில் சம்பந்தப்பட்ட காவலா்கள் கூண்டோடு பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

இதனிடையே, இந்த வழக்கை தாமாக எடுத்துக்கொண்ட சென்னை உயா் நீதிமன்றத்தின் கண்காணிப்பில், விழுப்புரம் தலைமைக் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. மீதான வழக்கை வருகிற டிசம்பா் மாதம் 20-ஆம் தேதிக்குள் முடிக்க உயா் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. மேலும், வழக்கை தினமும் விசாரிக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த நிலையில், இந்த வழக்கு விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி கோபிநாதன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. வருகிற 9-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com