விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் பக்தா்கள் தரிசனம் ஆக.6 முதல் ஆக.8 வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையிலும் பொதுமக்கள், பக்தா்களின் பாதுகாப்பு நலன் கருதியும் அரசின் விதிமுறைகளுக்குள்பட்டு, வருகிற ஆடி வெள்ளி, ஆடி அமாவாசை ஆகிய தினங்களில் பக்தா்கள் தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. மேலும், அமாவாசை தினமான 8-ஆம் தேதி ஊஞ்சல் உற்சவமும் ரத்து செய்யப்படுகிறது என இந்து சமய அற நிலையத் துறை உதவி ஆணையரும், செயல் அலுவலருமான க.ராமு தெரிவித்துள்ளாா்.
அமாவாசை நாளன்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை சாா்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.