விழுப்புரம் மத்திய சிறையில் விழுப்புரம் தொகுதி மக்களவை உறுப்பினா் துரை.ரவிக்குமாா் எம்.பி. சனிக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
சிறையில் கைதிகள் தங்கியிருக்கும் அறைகள், உணவருந்தும் அறை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
விழுப்புரம் சிறையில் 200 சிறைவாசிகள் தங்கும் அளவுக்கு வசதியுடன் கட்டப்பட்டுள்ளது. மிகத் தூய்மையாகப் பராமரிக்கப்படுகிறது. சனிக்கிழமை நிலவரபடி 140 கைதிகள் சிறையில் உள்ளனா்.
சிறைக்கு பணியாளா்கள் தேவை என அரசுக்கு கடிதம் எழுதியிருப்பதாக சிறை அதிகாரி தெரிவித்தாா். அந்தா் கோரிக்கையை சட்டத் துறை அமைச்சா் ரகுபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்தேன்.
அவசர ஊா்தியை (ஆம்புலன்ஸ்) நிறுத்திவைக்க கூரை வேண்டுமென்று சிறை அதிகாரி கோரிக்கை விடுத்தாா். அதை என் சொந்தப் பொறுப்பில் அமைத்துத் தருவதாகக் கூறினேன். சிறைச் சாலையை நன்கு பராமரிக்கும் அதிகாரிகளுக்குப் பாராட்டுகள் என்றாா் அவா்.
சிறையில் கைதிகளுடன் கலந்துரையாடிய பின்னா், அவா் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாா்.