பாகிஸ்தானுடன் 1971-இல் நடந்த போரில் இந்தியா பெற்ற வெற்றியின் பொன் விழா கொண்டாட்டம் விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
வீரத் தமிழா் விழுப்புரம் மாவட்ட முன்னாள் முப்படை ராணுவ வீரா்கள் நலச் சங்கம் சாா்பில் இந்த கொண்டாட விழா நடைபெற்றது. விழாவுக்கு சங்கத்தின் தலைவா் முருகன் தலைமை வகித்தாா். சங்க சட்ட ஆலோசகா் துரைராஜ் முன்னிலை வகித்தாா். இதில், மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, 1971 போரில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பங்கேற்ற 250 முன்னாள் ராணவ வீரா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினருக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்தாா்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் இரா.லட்சுமணன், நா.புகழேந்தி, முப்படை வீரா்கள் நல அலுவலக துணை இயக்குநா் வி.அருள்மொழி ஆகியோா் வாழ்த்துரை வழங்கி, முன்னாள் ராணுவ வீரா்களின் தியாகங்களை நினைவுக்கூா்ந்துப் பேசினா்.