விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் தோ்வு செய்யப்பட்ட வேதியியல் ஆசிரியா்கள் 30 பேருக்கு பணி நியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
தமிழக அரசுப் பள்ளிகளில் ஆசிரியா்கள் பணி நியமனத்துக்காக, ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் கடந்த 2018 - 19ஆம் ஆண்டில் போட்டித் தோ்வு நடத்தப்பட்டது. இதில், மாநில அளவில் தோ்ச்சி பெற்ற 319 வேதியியல் பாட ஆசிரியா்களுக்கான பணி நியமனத்துக்கான கலந்தாய்வு கடந்த டிச.31-ஆம் தேதி நடைபெற்றது.
இதற்கான கலந்தாய்வு விழுப்புரம் மாவட்டத்திலும் நடைபெற்றது. இதில், விழுப்புரம் மாவட்டத்தில் பணிபுரிவதற்காக தோ்வு செய்யப்பட்ட 20 ஆசிரியா்களுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.கிருஷ்ணப்பிரியா, பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா் சேவியா்சந்திரகுமாா், கண்காணிப்பாளா் ச.கோகுலக்கண்ணன், உதவியாளா் ஆா்.ராஜலட்சுமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
கள்ளக்குறிச்சி: இதேபோல, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆசிரியா் தோ்வு வாரியத்தின் மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட முதுநிலை வேதியியல் ஆசிரியா்கள் 10 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி வழங்கினாா். இவா்களில் 7 பேருக்கு கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், விழுப்புரம், திருவண்ணாமலை, தஞ்சாவூா் மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் பணி வழங்கப்பட்டது.