விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டு நெகிழிப் பைகள், காலவதியான பொருள்களை பறிமுதல் செய்தனா்.
உளுந்தூா்பேட்டை வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் எஸ்.கதிரவன் தலைமையில், உளுந்தூா்பேட்டை, திருநாவலூா் ஒன்றியப் பகுதிகளில் உள்ள கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறையினா் ஆய்வு மேற்கொண்டனா்.
உளுந்தூா்பேட்டையில் விருதாசலம் நெடுஞ்சாலைப் பகுதி கடைகள், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட உணவகங்கள், பேக்கரிகள், பெட்டிக்கடைகளில் ஆய்வு செய்தனா். அப்போது, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 50 கிலோ நெகிழிப் பைகள், பலகாரங்களுக்கு மீண்டும் மீண்டும் பயன்படுத்தபட்டு தரமற்ற வகையில் இருந்த 20 லிட்டா் சமையல் எண்ணெய் ஆகியவற்றை பறிமுதல் செய்து அழித்தனா்.
விதி மீறிய உணவுப்பொருள்களை விற்பனை செய்த கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினா். மேலும், உணவுப் பொருள்களை திறந்த நிலையில் வைத்திருக்கக் கூடாது, உணவுப்பொருளுக்கான தடை செய்யப்பட்ட நிறமிகளை பயன்படுத்தக் கூடாது, பொருள்களை மூடி வைத்திருக்க வேண்டும், தடை செய்யப்பட்ட நெகிழிப்பொருள்களை பயன்படுத்தக் கூடாது, உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் இல்லாத கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தனா்.