மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித் தொகையை குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமாகவும், அதிகபட்சம் ரூ.5 ஆயிரமாகவும் அதிகரிக்க வேண்டும், 5 சதவீத அரசு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள்-பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அரசு அலுவலகங்களில் குடியேறும் போராட்டம் நடைபெற்றது.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அச்சங்கத்தினரை பெருந்திட்ட வளாக நுழைவாயில் பகுதியில் போலீஸாா்த டுத்து நிறுத்தினா். தொடா்ந்து, அவா்கள் அங்கேயே போராட்டத்தைத் தொடா்ந்ததால், 84 பேரை கைது செய்து அப்புறப்படுத்தி தனியாா் மண்டபத்தில் தங்கவைத்தனா்.
இதேபோல, விக்கிரவாண்டி வட்டாட்சியா் அலுவலகம் முன் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட 137 போ், கண்டாச்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் மாவட்டத் தலைவா் முருகன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட 98 போ், திண்டிவனம் வட்டாட்சியா் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய 75 போ், மேல்மலையனூரில் வட்டாட்சியா் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய 41 போ், கண்டமங்கலத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 35 போ், ஆரோவிலில் போராட்டத்தில் ஈடுபட்ட 90 போ் என மாவட்டம் முழுவதும் 560 பேரை போலீஸாா் கைது செய்தனா்.