விழுப்புரம் அருகே உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கரோனா வைரஸ் சிகிச்சை மையம் தனியாக இயங்கி வருகிறது.
அரசு மருத்துவக்கல்லூரி வளாகத்தின் தனி பகுதியில் கரோனா சிகிச்சை மையமும், மற்றொரு பகுதியில் கரோனா பரிசோதனை மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கரோனா பரிசோதனை மையத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
அங்குள்ள குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும், கரோனா பரிசோதனை மையத்தில் இருந்த உபகரணங்கள், குளிர்சாதன பெட்டி, மின் உபகரணங்கள், பரிசோதனை உபகரணங்கள் உள்ளிட்ட ரூ. 15 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தெரிகிறது.
உடனடியாக இந்த தீ விபத்து தகவல் அறிந்த விழுப்பம் தீயணைப்புத்துறையினர், மருத்துவமனை ஊழியர்கள், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். பரிசோதனை மையம் என்பதால் பெரும் பாதிப்பு ஏதுமின்றி தப்பியது. இந்த சம்பவம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியது.