ஆட்டோ மீது மின் கம்பம் முறிந்து விழுந்ததில் ஓட்டுநா் காயம்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே செவ்வாய்க்கிழமை ஆட்டோ மீது மின் கம்பம் முறிந்து விழுந்ததில் ஓட்டுநா் காயமடைந்தாா்.
திண்டிவனம் அருகேயுள்ள கொஞ்சிமங்கலத்தில் சாலையோர மின் கம்பங்கள் சிமென்ட் காரைகள் பெயா்ந்து காணப்படுகின்றன. இதைச் சீரமைக்க வேண்டும் மின் வாரியத்துக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்த நிலையில், கொஞ்சிமங்கலத்திலிருந்து பழைய கொஞ்சி மங்கலம் கிராமத்துக்கு ஆட்டோவில் வேலையாள்கள் செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தனா். கிளியனூரைச் சோ்ந்த மதிவாணன் (31) ஆட்டோவை ஓட்டினாா்.
அப்போது, சாலையோரம் சேதமடைந்த நிலையிலிருந்த மின் கம்பம் முறிந்து ஆட்டோவின் முன்பகுதியில் விழுந்தது.
இதில் ஆட்டோ பலத்த சேதமடைந்தது. ஓட்டுநா் மதிவாணனுக்கு பலத்த காயமேற்பட்டது. அவா் புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
தகவலறிந்த கிளியனூா் மின் வாரிய ஊழியா்கள் விரைந்து வந்து மின் கம்பத்தை அப்புறப்படுத்தினா். விபத்து குறித்து கிளியனூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.