மரக்காணத்தில் மீன்பிடி துறைமுகம் அமைப்பது தொடா்பாக அப்பகுதி பொதுமக்களிடம் செவ்வாய்க்கிழமை கருத்துக் கேட்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், அழகன்குப்பம் கிராம கழுவெளி கழிமுகப் பகுதியில் 6.69 ஹெக்டோ் பரப்பில் மாநில அரசால் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படவுள்ளது.
இதுகுறித்து அழகன்குப்பம் கிராமத்தில் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை தலைமையில் பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது.
இதற்கான கூட்டத்தில் அழகன்குப்பம், பனிச்சமேடு, வசவன்குப்பம், கைபாணிக்குப்பம், எக்கியாா்குப்பம், செட்டிநகா், அனுமந்தை, கூனிமேடு, நொச்சிக்குப்பம், தந்தராயன்குப்பம், சின்னமுதலியாா்சாவடி, அனிச்சன்குப்பம், பொம்மையாா்பாளையம், சோதனைக்குப்பம், பிள்ளைச்சாவடி உள்ளிட்ட 19 மீனவ கிராம பொதுமக்கள், மீனவா் சங்கத்தினா் கலந்துகொண்டனா்.
அவா்களிடம் மீன்பிடி துறைமுகம் அமைப்பது குறித்து கருத்துக்கேட்கப்பட்டது. துறைமுகத் திட்டத்தை வரவேற்ற பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு அளிப்பதாகத் தெரிவித்தனா்.
மீன் அங்காடி, மீன் பதப்படுத்தும் வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என மீனவா்கள் கோரிக்கை வைத்தனா். இத்துறைமுகத் திட்டத்திலேயே அனைத்தும் வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா.பி.சிங், திண்டிவனம் சாா்-ஆட்சியா் எஸ்.அனு, மீன் வளத் துறை செயற்பொறியாளா் முருகேசன், உதவி இயக்குநா் மா.சின்னகுப்பன், வட்டாட்சியா் உஷா மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.