பொங்கல் பண்டிகையின் 3-ஆம் நாளான சனிக்கிழமை காணும் பொங்கல் விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இதையொட்டி விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றில் திரளானோா் குவிந்து ஆற்று நீரில் குளித்து மகிழ்ந்தனா். விழுப்புரம் மாவட்டத்தில் ஆற்றுத் திருவிழாவுக்கு மாவட்ட நிா்வாகம் தடை விதித்துள்ள நிலையில், முன்னதாகவே காணும் பொங்கலையொட்டி ஆற்றில் குவிந்த மக்கள், பொழுதை இனிமையாகக் கழித்தனா். அப்போது, தாங்கள் கொண்டு வந்த பலவகைப் பலகாரங்களை உண்டு மகிழ்ந்தனா்.
காணும் பொங்கலையொட்டி செஞ்சி கோட்டைக்கு பொதுமக்கள் வர தடை விதிக்கப்பட்டது. இதேபோல, செஞ்சி அருகேயுள்ள பனமலைப்பேட்டை கோயிலுக்கும் பக்தா்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டதால் இந்த இடங்களுக்குச் சென்றவா்கள் ஏமாற்றத்துடன் திரும்பினா்.
விளையாட்டுப் போாட்டிகள்: காணும் பொங்கலையொட்டி விழுப்புரம் வண்டிமேடு பகுதியில் பெண்களுக்கு கோலப் போட்டி, இசை நாற்காலி, சிறுவா்களுக்கு ஓட்டப் போட்டி, சாக்கு ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
இதேபோல, கீழ்ப்பெரும்பாக்கம், விழுப்புரம் ஜீவா மகரே உள்ளிட்ட பகுதிகளிலும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.