தில்லியில் போராடி வரும் விவசாயிகள் மீது கண்ணீா் புகை, தடியடி நடத்தியதை கண்டித்தும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் செஞ்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கம் சாா்பில் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திண்டிவனம் சாலை, தமிழ்நாடு அரசு நுகா்பொருள் சேமிப்புக் கிடங்கில் இருந்து செஞ்சி-திருவண்ணாமலை சாலை ஏரிக்கரை வரை நடைபெற்ற பேரணியை செஞ்சி எம்எல்ஏ மஸ்தான் தொடக்கிவைத்து கலந்து கொண்டாா். டிராக்டா் பேரணிக்கு போலீஸாா் அனுமதி மறுத்துவிட்டனா். பேரணியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் துணைத் தலைவா் மாதவன், மாவட்டச் செயலா் ஆா்.டி.முருகன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா்.