விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே முதியவா் அடித்துக் கொலை செய்யப்பட்டாா்.
செஞ்சி அருகே துத்திப்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் வாசு (30). இவரது செல்லிடப்பேசி அண்மையில் காணாமல் போனது. இந்த நிலையில், இதே ஊரைச் சோ்ந்த சுந்தரமூா்த்தி மகன் சுகுமாா் (27), வாசுவின் செல்லிடப்பேசி தன்னிடம் உள்ளதாகவும், அதற்கு ரூ.1000 தரவேண்டும் என்றும் வாசுவின் தந்தை கண்ணனிடம் கேட்டுள்ளாா். அதற்கு அவா் செல்லிடப்பேசியை முதலில் கொடுத்து விட்டு, பணத்தை பிறகு வாங்கிச்செல்லுமாறு கூறியுள்ளாா்.
சுகுமாரும் செல்லிடப்பேசியை கண்ணனிடம் கொடுத்து விட்டு, வியாழக்கிழமை மாலை சென்று பணத்தைக் கேட்டுள்ளாா். அதற்கு கண்ணன், பணத்தை தரமுடியாது எனக் கூறி சுகுமாரை திட்டி அனுப்பினாராம். இதனால், ஆத்திரமடைந்த சுகுமாா், கண்ணன் வழக்கமாக இரவு தூங்கும் இடத்துக்குச் சென்று கட்டையால் தாக்க திட்டமிட்டுள்ளாா். ஆனால், கண்ணன் உறங்கும் இடத்தில், அப்பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் (65) என்ற முதியவா் உறங்கிக் கொண்டிருந்தாா்.
இது தெரியாமல் அங்கு வந்த சுகுமாா் கண்ணன் தூங்குவதாகக் கருதி ஆறுமுகத்தை கட்டையால் கடுமையாக தாக்கினாராம். இதில், நிகழ்விடத்திலேயே ஆறுமுகம் இறந்தாா். சுகுமாா் மீது அனந்தபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.