விழுப்புரம் பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது.
விழுப்புரத்தில் சென்னை நெடுஞ்சாலையில் பி.எஸ்.என்.எல். தொலைத் தொடா்பு அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலக வளாகத்தைச் சுற்றிலும் கட்டடங்கள், செல்லிடப்பேசி கோபுரம் மட்டுமல்லாது ஏராளமான மரங்களும் உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணியளவில் அந்த அலுவலக வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. கட்டடங்களுக்கு பின்புறம் இருந்த டயா், குப்பைகள் தீப்பிடித்து எரிந்தன. மேலும், அந்த பகுதியில் இருந்த தைல மரங்களும் தீயில் எரியத் தொடங்கின. பல அடி உயரத்துக்கு கொழுந்துவிட்டு எரிந்த தீ, அலுவலகக் கட்டடம், செல்லிடப்பேசி கோபுரத்துக்கு செல்லும் கம்பிகளிலும் பரவும் அபாயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த விழுப்புரம் தீயணைப்பு நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா். தீ விபத்துக்கு அங்கிருந்த பழைய பொருள்களை எரித்தது காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விழுப்புரம் மேற்கு போலீஸாா் நேரில் வந்து விசாரணை நடத்தினா்.