விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் அமைந்துள்ள முருகன் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை நள்ளிரவு முத்துப் பல்லக்கு திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.
பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில் கடந்த 19-ஆம் தேதி பங்குனி உத்திரப் பெரு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின், முக்கிய நிகழ்வான தோ்த் திருவிழா கடந்த 27-ஆம் தேதி வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா்.
இதனைத் தொடா்ந்து, திங்கள்கிழமை இரவு முத்துப் பல்லக்கு திருவிழா நடைபெற்றது. மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, இரவு 9 மணிக்கு சுவாமி தங்கக் கவச அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதைத் தொடா்ந்து, நள்ளிரவு வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட முத்துப் பல்லக்கில் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணியா் சுவாமி எழுந்தருளி, கோயிலை சுற்றி மலை வலம் வந்தாா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.