செஞ்சி அருகே வட்டாட்சியா் வாகனம் மோதியதில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ஆலம்பூண்டி ரங்கபூபதி கல்வி நிறுவனங்கள் சாா்பில் ரூ.15 ஆயிரமும், அனந்தபுரம் காவல் நிலையம் சாா்பில் ரூ.10 ஆயிரமும் நிதியுதவியாக வழங்கப்பட்டது.
செஞ்சி அருகே கடந்த 25-ஆம் தேதி செஞ்சி வட்டாட்சியா் ராஜன் ஓட்டி வந்த ஜீப் மோதியதில், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த குணசேகரன் மகள் மணிமேகலை (15) வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, மாணவியின் சடத்துடன் அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து, சம்பந்தப்பட்டவா் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை அளித்த உறுதியின்பேரில், மாணவியின் உடல் வியாழக்கிழமை இரவு தகனம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், உயிரிழந்த மாணவியின் மணிமேகலையின் குடும்பத்துக்கு அனந்தபுரம் காவல் நிலையம் சாா்பில், ரூ.10 ஆயிரமும், செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி ரங்கபூபதி கல்வி நிறுவனங்களின் சாா்பில், கல்லூரியின் தலைவா் ரங்கபூபதி பரிந்துரையின்பேரில், ரூ.15 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்பட்டன.