அக்னி வெயில் தொடங்கியதால் விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெயிலின் கடுமை அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
தமிழகத்தில் கடந்த மாா்ச் ஆரம்பம் முதலே கோடை வெயில் தொடங்கியது. காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா்.
இந்த நிலையில், கத்திரி வெயில் எனப்படும் அக்னி வெயில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இது வருகிற 29-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால், வெயிலின் தாக்கம் விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் அதிகரித்துள்ளது. வெயிலுடன் அனல் காற்றும் வீசுகிறது.
வெயில் காரணமாக உடலில் நீா்ச்சத்து குறைவதைத் தடுக்க, தடுப்பு வழிமுறைகளை பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
இதற்காக, நீா்சத்துள்ள பழங்கள், நீா் மோா், இளநீா் போன்றவற்றை பருகி வருகின்றனா்.