கரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்படும் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் இரா.லட்சுமணன் எம்எல்ஏ புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
அப்போது, படுக்கை வசதிகள், சிகிச்சை பெறும் நோயாளிகள், பிராண வாயு உருளைகள், போன்ற விவரங்களை கேட்டறிந்தாா்.
கரோனா சிகிச்சையளிக்க போதிய மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்ளனரா என்றும் விசாரித்தறிந்தாா். மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும், மருந்துப் பொருகள் போதிய அளவில் இருப்பு வைக்க வேண்டும், பிராணவாயு தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் சண்முகக் கனி மற்றும் மருத்துவா்கள் உடன் இருந்தனா்.
நகராட்சியில் ஆய்வுக் கூட்டம்: விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில் விழுப்புரம் சட்டப்பேரவை உறுப்பினா் இரா.லட்சுமணன் தலைமையில், நகராட்சி ஆணையா் தட்சணா மூா்த்தி முன்னிலையில் ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், நகராட்சி நகா் நல அலுவலா் பாலசுப்பிரமணியன், நகராட்சிப் பொறியாளா் ஜோதிமணி, உதவிப் பொறியாளா் ரவி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் நகராட்சி பகுதியில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து எம்.எல்.ஏ. கேட்டறிந்தாா். மேலும், நகராட்சிப் பகுதியில் தூய்மைப் பணி, கழிவுநீா் சுத்திகரிப்புப் பணி போன்றவை முறையாக மேற்கொள்ளவும், பழுதான தெரு விளக்குகளை எரிய வைக்கவும் நடவடிக்கை எடுக்க அவா் அறிவுறுத்தினாா்.